அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் வயிறு எரிகிறது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
குடும்ப அரசியல் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடி பொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது. அந்த உவமை தனக்குப் பொருந்துகிறதா என அவர் பார்க்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா குடும்ப அரசியல் செய்பவரையும், பரம்பரை அரசியலையும் ஒழித்துக் கட்டுவோம் என்றார். அ.தி.மு.க.விலும், பா.ஜ.க.விலும் யார் குடும்ப அரசியல் நடத்துகிறார்கள்?
தமிழகத்திற்கு கொண்டுவந்தது என்ன? நேரு தொடங்கி தற்போது ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா காந்தி- இதுதான் வாரிசு அரசியல். அவர்களின் காலைப் பிடித்து அரசியல் செய்து கொண்டுள்ள தி.மு.க. கட்சி அல்ல. கருணாநிதியின் மகன்கள் மு.க.அழகிரி, ஸ்டாலின், அவரின் மகன் உதயநிதி, துணைவியார் மகள் கனிமொழி, முரசொலி மாறன், மகன் தயாநிதிமாறன் என்பதுதான் குடும்ப அரசியல். வெட்கமில்லாமல் யாரைப் பார்த்துக் குடும்ப அரசியல் என்கிறார். கருணாநிதிக்கு எல்லா ஆற்றலும் உண்டு. அவரின் வாரிசுகளுக்கு வாரிசு என்பதை தவிர வேறு என்ன தகுதி உள்ளது. மத்தியில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழகத்திற்கு என்ன கொண்டு வந்தது? காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடமுடியாத அரசு திமுக. ஆனால் அ.தி.மு.க.தான் காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.
ஏன் வயிறு எரிகிறது? பா.ஜ.க.வின் இந்த 7 ஆண்டு கால ஆட்சியில் இந்திய மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்கிறார்கள். எங்காவது துப்பாக்கிச் சூடு நடைபெற்றதா? ஆனால் காங்கிரஸில் அங்கம் வகித்த தி.மு.க. ஆட்சியில் அப்படியா? அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடர்ந்தால் இவருக்கு என்ன வந்தது? இவருக்கு ஏன் வயிறு எரிகிறது? அண்ணா, கருணாநிதியுடன் அரசியல் செய்தவர்கள் எல்லாம், தற்போது உதயநிதியின் காலைப் பிடிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.