நடப்பாண்டிற்கான மருத்துவ கலந்தாய்வை இணைய வழியில் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நடப்பாண்டிற்கான மருத்துவ கலந்தாய்வை இணைய வழியில் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, நேரடி கவுன்சிலிங் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளதற்கு கவலையையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறேன். நேரடி கவுன்சிலிங் என்பது, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்குப் பலவகை இன்னல்களை ஏற்படுத்தும்.
மருத்துவக் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் கொரோனா சோதனை நடத்துவதும், நீண்ட நாட்கள் கலந்தாய்வினை நடத்துவதும், நடைமுறை சாத்தியமா என்பதை அரசு அதிகாரிகளோ- அமைச்சர் விஜயபாஸ்கரோ, முதல்வரோ சிந்தித்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை.
தவறுகள் கூடாது
தற்போது தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்.பி.பி.எஸ். இடங்களும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன.
அதோடு, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 852 எம்பிபிஎஸ் இடங்களும், 690 பிடிஎஸ் இடங்களும் உள்ளன என்பதால், இந்தக் கலந்தாய்வு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிர்பார்த்தபடி பயனளிக்கும் வகையில்- எவ்விதத் தவறுகளுக்கும் சிறிதும் இடமளிக்காமல் நடத்தப்பட வேண்டியது மிக மிக அவசியம்.
இணையவழி
கடந்த ஆண்டு கலந்தாய்வு என்பது, “முறைகேடுகளின் சொர்க்கமாக” அமைந்திருந்ததைச் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
கொரோனா இரண்டாவது அலை தாக்குதல் இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கும் சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட மொத்த மருத்துவ சேர்க்கையையும் “ஆன்லைன் கவுன்சிலிங்” மூலமே நடத்த வேண்டும்.
வெளிப்படைத்தன்மை
வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையுடனும், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் எவ்விதச் சந்தேகமும் ஏற்பட்டுவிடாமல் மருத்துவக் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.