ஜனவரியில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பலவும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-
ஊழல் ஆட்சி தி.மு.க.
ஊழலின் மொத்த உருவமே தி.மு.க. தான். விஞ்ஞான ரீதியில் எப்படி ஊழல் செய்ய முடியும் என நிருபித்த கட்சி தி.மு.க. சர்க்காரிய கமிஷன் விசாரணையின் போது விசாரணை நடத்திய அதிகாரியே ஆச்சிரியப்படும் அளவுக்கு விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ய முடியும் என உலகுக்கே எடுத்துக் காட்டியது திமுக தான். இந்திய சரித்திரத்தில் ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது திமுக ஆட்சி தான். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.78 லட்சம் கோடி ஊழல் செய்தவர்கள் தி.மு.க.வின் ராசாவும், கனிமொழியும் தான்.
மேல் முறையீடு
அவர்கள் மீது வழக்கை தொடுத்தது தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு தான். ராசாவும், கனிமொழியும் தியாகம் செய்தா திகார் சிறைக்கு சென்றார்கள்? 2ஜி வழக்கில் ஆதாரம் நிருபிக்கப்படவில்லை என கூறி அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. போதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி தான் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது சி.பி.ஐ. மேல் முறையீடு செய்துள்ளது. விரைவில் வழக்கு விசாரணைக்கு வரும். அப்போது தப்பிக்க முடியாது என்ற பயத்தில் தான் ஸ்டாலினும், ஆ.ராசாவும் பிதற்றுகின்றனர்.
சாதிக் பாட்ஷா, அண்ணாநகர் ரமேஷ்
மக்கள் அவர்களை நம்பத் தயாராக இல்லை. ஊழல் பற்றி பேச தி.மு.க.வுக்கு எந்த அருகதையும் இல்லை. 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. சார்பில் அப்பழுக்கற்ற, தெளிவான, ஊழலற்ற ஆட்சி நடக்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அதிமுகவினர் சிறைக்கு செல்வார்கள் என ஸ்டாலின் பூச்சாண்டி காட்டுகிறார். 2021-ல் மீண்டும் அதிமுக ஆட்சியே மலரும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சாதிக் பாட்ஷா கொலை வழக்கு, அண்ணா நகர் ரமேஷ் கொலை வழக்கு போன்ற வழக்குகளை தூசிதட்டி மீண்டும் விசாரிக்கும் போது ஸ்டாலினும் சிறைக்கு செல்லும் நிலை தான் ஏற்படும்.
கூட்டணி மாறும்
2021 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் பல அ.தி.மு.க. பக்கம் வருவார்கள். எங்களை யாரும் மிரட்டவில்லை. மடியில் கனமில்லை, அதனால் எங்களுக்கு பயம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.