மு.க.ஸ்டாலினை என்னுடைய பாணியில்தான் நான் விமர்சிப்பேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
யார் ஜோக்கர்?
தகுதியில்லாதவருடன் விவாதிக்க தயாரில்லை என ஆ.ராசா கூறியுள்ளார். நானும் தகுதியில்லாதவருடன் விவாதம் நடத்த தயாரில்லை. ஆ.ராசாவுக்கு தகுதி கிடையாது. நான் காரில் செல்வது குறித்து பேசுகிறார். அவர் கஷ்டப்பட்டு வேலை செய்து சம்பாதித்தது போன்று பேசுகிறார். அவருடைய குற்றம், குறைகளை நாடறியும். அவருடன் விவாதிக்க எனக்குப் பிடிக்கவில்லை. என்னை ஜோக்கர் என கூறுகிறார். நான் ஜோக்கரா அவர் ஜோக்கரா என்பது தேர்தலில் முடிவாகும். ஸ்டாலின் எங்கள் தலைவரை ஒருமையில் பேசுகிறார், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். நாங்கள் எந்த ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்பவர்கள் அவர்கள்தான்.
ஆன்மீக ஆட்சி
எங்களிடம் நியாயம் இருக்கிறது. அவர்களிடம் அநியாயம் இருக்கிறது. என்னுடன் விவாதிக்க தயாராக இல்லையென்றால் ஆ.ராசா மீது தவறிருக்கிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறைதானே சிறையில் அடைத்தது.
ஆன்மீக அரசியலை வழிநடத்துவதுதான் ஆன்மீக கட்சி. ஆன்மிகம் மதத்தை சார்ந்தது அல்ல. நாங்கள் சமதர்மத்தைக் கடைப்பிடிக்கிறோம்.
அப்படிதான் விமர்சிப்பேன்
ரஜினிகாந்த் எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவதில் தவறேதும் இல்லை. தி.மு.க. கூட்டணியில் ஒருங்கிணைப்பு கிடையாது. ஸ்டாலின் பின்னால் இருப்பவர்கள் அவரை வெறுக்கிறார்கள். கோமாளித்தனமாக பேட்டி கொடுக்கிறார். ஸ்டாலினை நாங்கள் விமர்சிக்கத்தான் செய்வோம். என்னுடைய பாணியில் நான் பேசுவேன். யாரையும் அசிங்கப்படுத்திப் பேசும் எண்ணம் எனக்குக் கிடையாது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தபிறகுதான் கொள்கைகள் தெரியும். எங்களுக்கு எதிரி திமுக தான். ரஜினிகாந்த் ஆரசியலுக்கு வந்தது அற்புதம்தான். எங்களுக்கு அதனால் தாக்கம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.