வரும் டிசம்பர் 18ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென இரண்டு வாரங்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முன்வரவில்லை. திருத்தங்களை மட்டும் மேற்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
டெல்லியில் இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகளின் போராட்டம் வெடிக்கத் துவங்கியுள்ளது. அதன் ஒருகட்டமாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுகிறார்கள் விவசாய சங்கத்தினர். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், “மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி மாநகரம் பல கோடி விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். கோரிக்கையை ஏற்று சட்டத்தை திரும்பப் பெற வேண்டிய மத்திய அரசாங்கம் உண்மைக்குப் புறம்பான செய்திகளை சொல்லி அவதூறு பிரச்சாரங்கள் செய்து விவசாயிகளின் போராட்டத்தை பிளவுபடுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விவசாயிகள் போர்வையில் போராட்டக்களத்தில் நக்சலைட்களும், தீவிரவாதிகளும் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள் என்று அப்பட்டமான பொய்யை தெரிவித்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை அவர் திரும்ப பெற வேண்டும்” என்று கண்டனத்தை பதிவு செய்தார்.
read more: மதுரை இரண்டாம் தலைநகர்: மதுவிலக்குக்கு நோ சொன்ன கமல்
நியாயமான கோரிக்கையை ஏற்று சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு பிரதமர் உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதோடு, இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து இருக்கிறது. போராட்டக்குழு அறைகூவலுக்கு இணங்க தமிழ்நாட்டிலும் சுங்கச்சாவடிகளை தடுத்து நிறுத்துவது, ரயில் நிலையங்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என நாங்கள் எச்சரிக்கிறோம். விவசாயிகள் போராட்டத்தில் பங்கு பெற வேண்டுகிறேன்.
வரும் டிசம்பர் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு இதனை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். பல்லாயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்” என்று அறிவித்தார்.




