புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி ரவுடிகளை ஊக்குவித்தார் என்று முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். நிருபர்களுக்கு பேட்டி அளித்து, அவர் கூறியதாவது:-
ரவுடி கும்பல் தாக்குதல்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் ரவுடி கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். இதில், மிகப்பெரிய சதி பின்னணி உள்ளது. காவல்துறை விசாரிக்கிறது. அவருக்குப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொலை புரிவோரை அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் ஊக்குவிக்கிறார்கள். மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர் கொலைகளின் பின்னணியில் அப்பகுதியிலுள்ள சில அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்.
ரங்கசாமி ஆட்சியில் கொலை
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ரங்கசாமி, முன்பு முதல்வராக இருந்தபோது சகஜமாக கொலைகள் நடந்தன. பல கொலை, கொள்ளை வழக்குகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு கண்டறிந்தோம். அவரது ஆட்சியில் 19 வயது சிறுவன் வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் போடப்பட்டு ஏரியில் தூக்கி எறிந்ததன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். வழக்கை மூடி மறைத்துள்ளனர். அதை தோண்டி எடுத்து விசாரணை தொடங்கியுள்ளோம்.
ரங்கசாமி முதல்வராக இருந்தபோது ரவுடிகள் சட்டப்பேரவையில் இருந்தனர். ரவுடிகளை ஊக்குவித்து தனிப்பட்ட முறையில் ரங்கசாமி வளர்த்தார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகம் வழக்கில் தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அரசியல் பின்னணியை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியலில் எதிர் நிலையில் உள்ளோரை ஒழிக்க சிலர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டோரை அரசு விட்டுவைக்காது. அரசியலில் விரோதம், குரோதம் இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.