முன்னாள் எம்.எல்.ஏ கையில் வெறும் 20 ரூபாய் வைத்துக் கொண்டு, தம்பி நான் ஆட்டோவில் வரலாமா என கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கிழக்கு தொகுதியில் ஒரே ஒரு முறை எம்.எல்.ஏவாக வென்ற ஒருவர், மிகப்பிரம்மாண்டமாக தனது இல்ல திருமண விழாவை சமீபத்தில் நடத்தி காண்போரை ஆச்சரியப்பட செய்தார். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, அவர் வெறும் டீகடை மட்டுமே நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு முறை எம்.எல்.ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்டு நேர்மையாக மக்களுக்காக உழைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நன்மாறன், பயணம் செய்ய கூட பணமின்றி தவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதுரை முனிச்சாலையை சேர்ந்த ஆட்டோ பாண்டி என்பவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
அந்த பதிவில், கடந்த 27-ம் தேதி காலையில் மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, அரசு மருத்துவமனை அருகே பேருந்தில் ஏற முயன்ற பெரியவர் ஒருவர் தன்னுடைய ஒற்றைக்கால் செருப்பைத் தவற விட்டுவிட்டார். உடனே, பேருந்தில் இருந்து இறங்கிய பெரியவர், தன் செருப்பை தேடிக் கொண்டிருந்தார்.
இதை கண்ட பாண்டி, அந்தப் பெரியவர் மதுரையின் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் என்பதை அறிந்து வியந்து போனார். பிறகு, நன்மாறனை எங்கே போய் இறக்கி விட வேண்டுமென்று பாண்டி கேட்டுள்ளார். அதற்கு, கருப்பாயூரணி செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதே வேளையில் தன்னிடத்தில் ஆட்டோவுக்கு கொடுக்க 20 ரூபாய்தான் இருக்கிறது என்று அப்பாவியாக கூறியிருக்கிறார். மதுரை கிழக்கு தொகுதி முன்னாள் எம்.எல். ஏ நன்மாறனின் நிலையை கண்டு பாண்டி அதிர்ந்தும் போயுள்ளார். அரசியலில் நேர்மையாக வாழ்ந்த அந்த மனிதரை கருப்பாயூரணி சென்று இறக்கி விட்டு மன நிறைவுடன் திரும்பியதாக பாண்டி குறிப்பிட்டுள்ளர்.
மேலும், கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த எளிமையின் ஏணி நன்மாறன் ஐயா . கொள்கையில் முரண்பாடுகள் இருந்தாலும் மிகவும் எளிமையான நேர்மையான மனிதநேயம் கொண்ட மனிதனாக மிகவும் பிடித்த நபர் என்றும் தெரிவித்துள்ளார்.