தான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என்று புதுச்சேரியில் நடந்த விழாவில் பார்த்திபன் பேசியுள்ளார்.

புதுச்சேரி அரசின் சார்பில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் பார்த்திபன் நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு படத்திற்கு சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கப்பட்டது. விருதுக்கான பாராட்டு பத்திரமும், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் நடிகர் பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபனிடம், ரஜினியுடன் இணையத் தயார் என கமல் அறிவித்துள்ளாரே என்ற கேள்வியை எழுப்பினார்கள். “இங்கு பல அரசியல் கட்சிகள் உதயமாகியுள்ளன. ஆகவே, யாருக்கு வாக்களிப்பது என்று மக்களும் குழப்பமாகத்தான் இருக்கிறார்கள். அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிற்பபான ஆட்சி தருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. நடிகர்கள் என்பதால் ஒதுக்க வேண்டியதில்லை” என்று பதிலளித்தார் பார்த்திபன்.
சினிமாவை விட்டு அரசியலுக்குச் சென்றாலும் கலையின் மேல் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோருக்கு ஈடுபாடு உண்டு என்று கூறிய பார்த்திபன், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து நல்லது செய்தோர் நிறையப் பேர் உண்டு என்றார்.
read more: கர்நாடகாவைப் போலவே தமிழகத்திலும் பாஜக ஆட்சி: சொல்கிறார் தமிழக பொறுப்பாளர்!
எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. முதல் படமான புதிய பாதையிலிருந்து கடைசி படமான ஒத்த செருப்பு வரை விளிம்பு நிலை மனிதர்களுக்கான அரசியலை பேசி வருகிறேன். அரசியல் மூலமாக மக்களுக்கு நன்மை செய்வது சமூக அக்கறையால் ஏற்படுவது என சுட்டிக்காட்டிய பார்த்திபன்,
“அது ஒரு கலைஞனுக்கு அதிகமாக இருக்கும். அதுபோலவே எனக்கும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. நிச்சயமாக எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேன். நான் மட்டுமல்ல இளைஞர்கள் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்” என்று கூறினார்.




