முதல்கட்ட ஊழல் புகார்களுக்கே முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவ்வளவு பதற்றப்பட வேண்டாம் என துரைமுருகன் கூறியுள்ளார்.

அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத் துவக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வினர் வீட்டுக்காக உழைத்து வருகிறார்கள். சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருந்தாரா எனக் கேள்வி எழுப்பி திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “முதலமைச்சரின் கண்களுக்கு கமிஷனும் கலெக்சனும் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. அதனால் எங்கள் கழகத் தலைவர் சென்னை மேயராக – உள்ளாட்சித்துறை அமைச்சராக – துணை முதலமைச்சராகச் சென்னை மாநகரத்திற்கும் – தமிழகத்திற்கும் ஆற்றிய சாதனைகள் தெரிந்திருக்க நியாயமில்லை” என்று கூறியுள்ளார்.
தினமும் எடப்பாடி பழனிசாமி கோட்டைக்குப் போவது எந்தப் பாலத்தின் வழியாக? முதலமைச்சர் பழனிசாமி பாணியிலேயே சொல்வதென்றால் – வீட்டிலிருந்து காரில் ஏறியதும் தூங்கி விடுகிறாரா என்று கேள்வி எழுப்பிய அவர், “சென்னை மாநகரை மேம்பாலங்களின் தலைநகராக மாற்றிக் காட்டியவர் ஸ்டாலின். மேடையில் அமர்ந்திருப்பவர்கள் மிட்டா மிராசுகளோ, தொழிலதிபர்களோ இல்லை என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர். அவர்கள் அந்த நிலையையும் கடந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. அதிமுக மேடையில் இன்று இருந்தவர்கள் ஊழல்வாதிகள்” என்றார்.
மேலும், “தமிழ்நாட்டு வரலாற்றிலே சிறப்பான ஆட்சி தந்தது அதிமுகதான் என்று கற்பனைக் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. ஊழலுக்காக முதலமைச்சரே ஜெயிலுக்குப் போனதும் முதலமைச்சர் மீதே சொத்துக் குவிப்பு வழக்கு வந்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சொத்துக் குவிப்புப் புகாரில் சிக்கியுள்ளவர்கள்; நீதிமன்றத்தின் தண்டனையைப் பெற வேண்டியவர்கள் என்பதை ஏனோ எடப்பாடி பழனிசாமி மறந்துவிட்டார்” என்றார்.
read more: தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான்: எல்.முருகன் திட்டவட்டம்!
முதலமைச்சர் மீதும் – அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதும் முதல்கட்டமாகக் கொடுத்திருக்கின்ற ஊழல் புகார்களுக்கே பழனிசாமி இவ்வளவு பதற்றப்படக்கூடாது. அனைத்து ஊழல் புகார்களும் கொடுக்கப்படும் போது இவருக்குத் தூக்கமே வராது போலிருக்கிறது. அந்த அளவிற்கு ஊழல் மலை மீது அமர்ந்திருக்கும் பழனிசாமிக்கும் – அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் தி.மு.க. பற்றியோ எங்கள் கழகத் தலைவர் பற்றியோ விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது?
முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே சாதனைகளைச் சொல்ல முடியாமல் திணறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, அடுத்தடுத்த கூட்டங்களிலும் திக்குமுக்காடப் போகிறார் என்பது மட்டும் நிச்சயம் என்றும் கூறியுள்ளார் துரைமுருகன்.




