காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான கட்டுமான பணிகளுக்கு அனுமதிக்கக்கூடாது என, பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தி.மு.க. மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா மற்றும் தயாநிதி மாறன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினார்கள், டெல்லியில் பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்தனர். அப்போது மேகதாது அணைகட்ட அனுமதியளிக்கக் கூடாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமரிடம் வழங்கினர்.
ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மேகதாது அணை
கர்நாடக முதலமைச்சர் தங்களைச் சந்தித்தபோது, தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, மேகதாது அணை உள்ளிட்ட நீர்ப்பாசன மற்றும் குடிநீர்த் திட்டங்களுக்கு முன்கூட்டியே அனுமதி வழங்குமாறு வலியுறுத்தி இருப்பது எனக்கு மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
மேகதாது அணைத் திட்டம், 05.02.2007 அன்று காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பையும், 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் முற்றிலும் மீறுவதாகும். இது விவசாயிகளின் நலனுக்கும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது.
தமிழகத்திற்கு எதிரானது
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாது அணை கட்டுவதற்கு தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மேகேதாது அணை கட்ட அனுமதி வழங்கும் விவகாரம் தற்போது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
தமிழகத்தை பாதிக்கும்
குடிநீர்த் திட்டம் என்ற போர்வையில் முன்மொழியப்படும் மேகதாது அணைத் திட்டம் காவிரியின் தாழ்வான வடிநிலப் பகுதிகளாக உள்ள மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வருவதில், எப்போதுமே சரிசெய்யவோ, மாற்றியமைக்கவோ முடியாத அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.
பல லட்சம் மக்களின் தேவையை நிறைவு செய்யும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மிக முக்கியமாக, அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ள இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கான நீர்ப்பங்கீட்டை இது கடுமையாகப் பாதிக்கும்.
எனவே, மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கைக்கோ அல்லது கட்டுமானப் பணிக்கோ, கர்நாடக முதலமைச்சர் கோரியபடி ஒப்புதல் வழங்கக் கூடாது எனச் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு அறிவுறுத்துமாறு, தி.மு.க. சார்பாக தங்களைக் கேட்டுக் கொள்கிறேன், என ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.