2 ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தினமும் நடத்தப்படும் என, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, கூட்டணி ஆட்சியின்போது தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, ‘2ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், இதனால், அரசுக்கு, ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், அப்போதைய மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான ஆ. ராசா மற்றும் அக்கட்சியின் எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த, டெல்லி, சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரமில்லை என கூறி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, கடந்த 2017ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக மனு மீதான விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில், 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், 2 ஜி வழக்கை விரைவாக விசாரிக்க ஒப்புக்கொண்டது. மேலும், வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடர் விசாரணை நடைபெறும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ள 2g வழக்கு திமுகவிற்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.