தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் மெல்ல பரவத் துவங்குவதால் கவனம் தேவை என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்படுவதை ஒட்டி வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் அதிக கவனம் தேவை என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பான அறிக்கைகளின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது மற்றும் கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் அங்கு பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அடுத்தடுத்து பண்டிகைக் காலம் வரவிருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது,
அனைத்து கோவிட்-19 வழிகாட்டுதல்களும் பள்ளி வளாகத்தில் பின்பற்றப்படும்.சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எப்போதும் முகக்கவசம் அணிந்து அவர்களுடன் சானிடைசர்களை வைத்திருக்க வேண்டும்.பள்ளிக் கல்வித் துறை தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுத்து வகுப்புகளை முறையாக நடத்துவதற்கு பொருத்தமான நிலையான இயக்க நடைமுறைகளை பரிந்துரைக்கும். வகுப்பிற்கு 20 மாணவர்கள் மட்டும் அமர வைக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
தற்போது, தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்கள் புதிய நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக உள்ளன. இந்த மாவட்டங்கள் சென்னை, கோவை, ஈரோடு மற்றும் செங்கல்பட்டு ஆகும். இதனால் இந்த மாவட்டங்களில் அதிக கவனம் தேவை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.