26ம் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது; 5 மாநில தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க திட்டம் என தகவல்.
டெல்லி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் கடந்த 16ம் தேதி நடைபெற்றத்து; அதில் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மிக முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் வலுவை அதிகரிக்கும் விதத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையை நாடு முழுவதும் நடத்த கட்சியின் தலைமை முடிவு செய்து அறிவித்தது. இந்நிலையில், வரும் 26ம் தேதி (செவ்வாய் கிழமை ) காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இந்த கூட்டத்தை பொறுத்தவரையில் உறுப்பினர் சேர்க்கையை விரிவாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனை தவிர உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட்,மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநில தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டு முயற்சியும், ஒற்றுமையும் தான் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தீர்மானிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்து இருந்த நிலையில் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.