தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு… சற்று முன் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கை கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டாலும் லட்சங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், கொள்ளை நோயை பயன்படுத்தி சில தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் பார்த்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நாதன் தனியார் மருத்துவமனைகளை மாநில அரசு தங்களுடைய கட்டுப்பாட்டி எடுத்து கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த பொதுநல மனுவில், கொரோனா இரண்டாவது அலை பரவலால் அப்பாவிகள் பலர் உயிரிழந்து வருவதாகவும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி படுக்கைகளுக்கும், சாதாரண படுக்கைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனைகள் ஒரு நாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்து வீடு திரும்பும் வரை மற்றொருவர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ரெம்டெசிவர் மருந்தை அரசு இலவசமாக வழங்குவதுடன், தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.மேலும், தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலில்கும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version