திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கப்பட்டது…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 47 பெரிய கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. அன்னை தமிழில் அர்ச்சனை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர், தொலைப்பேசி எண்களும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழில் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் தமிழில் அர்ச்சனை செய்து தரிசனம் செய்யலாம்.

தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால் முதல் நாளான இன்று பலர் தமிழில் அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர். இதற்கிடையே கடற்கரை, சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று ஏராளமானவர்கள் குவிந்தனர். மேலும் நாழிக் கிணற்றிலும் பக்தர்கள் புனித நீராடினர். அதிகமானவர்கள் திரண்டதால் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று நாழிக்கிணற்றில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்படவில்லை.

Exit mobile version