2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேவையான முன் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. அவ்வகையில் அதிமுக சார்பில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் அதிமுக நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்றுமுதல் 9 மாவட்டங்களிலும் அவர் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:- டெல்லியில் ஆயிரம் உறுப்பினர்கள் அமரும் வகையில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வரும் 2024 ஆம் வருடம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
கூட்டுறவு சங்க முறைகேடு எனக் கூறப்படும் வேளையில் எந்த கூட்டுறவுச் சங்கத்தில் முறைகேடு நடந்தது என்பது குறித்து அரசிடம் தெளிவான பதில் இல்லை. திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது. நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி ஏராளமான மக்கள் நகையை அடமானம் வைத்துள்ளனர் என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து நீட் தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக நீட் தேர்வு விலக்குக்காக. கொண்டு வந்த தீர்மானத்தையே திமுகவும் கொண்டு வந்துள்ளது. அதைப் போல் அதிமுக கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு சிறப்பான திட்டம் என்பதால் திமுகவும் அதையே பின்பற்றுகிறது என பதிலளித்தார்.