அ.தி.மு.க.வின் ஆட்சியால்தான் மு.க.ஸ்டாலினால் மதுரைக்கு அச்சமில்லாமல் வர முடிகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது, அவர் கூறியதாவது:-
மதுரைக்கான திட்டங்கள்
மதுரை மாவட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு அள்ளிக் கொடுத்து வருகிறது. ரூ.1000 கோடியில் மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ரூபாய் 30 கோடி மதிப்பில் புதிய ஆட்சியர் அலுவகம் கட்டப்படுகிறது, ரூ.1,200 கோடி மதிப்பில் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து குழாய் மூலம் மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 60 ஆண்டிற்கு குடிநீர் பஞ்சம் வராத வகையில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது,
மதுரை மாவட்ட மக்களுக்காக முதல்வர் செய்த பல்வேறு திட்டங்களை சொல்ல ஒரு நாள் போதாது. இதையெல்லாம் ஸ்டாலின் கருத்தில் கொள்ளாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
201 ஏக்கர் நிலம்
எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தமிழக அரசின் சார்பில் 201 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.21 கோடி அளவில் சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதி போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தி.மு.க. மத்திய அமைச்சரவையில் இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஒரு குரல் கூட கொடுக்கவில்லை. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக உரிமையை பறிகொடுத்து தி.மு.க..
அச்சமில்லாத பயணம்
2006ம் ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்து மதுரைக்கு வந்த பொழுது அவரை மர்மநபர் கத்தியால் தாக்க முயற்சித்தார். அதன்பின் தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு வர பயந்தவர் தான் இந்த ஸ்டாலின். அதன்பின் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் சுதந்திரமாக எந்தவித பயமும் இல்லாமல் இன்று வரை வந்து செல்கிறார்.
வெற்றி பெறுவோம்
தி.மு.க. ஆட்சியில் கோயில் நகரமாக இருந்த மதுரையை கொடியவர்களின் கூடாரமாக இருந்ததை மக்கள் இன்னும் மறக்கவில்லை. முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் மதுரை மக்கள் என்றைக்கும் உறுதுணையாக இருப்பார்கள். சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.