தமிழக மக்களுக்காக உயிரே போனாலும் சந்தோஷம்தான் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது நேற்று வரையிலும் கூட உறுதியாகமல்தான் இருந்துவந்தது. பெரும்பாலும் கட்சி ஆரம்பிக்கவில்லை என்ற தகவலையே ர்ஜினி அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பொய்யாக்கிய ரஜினி, ஜனவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக அதிரடியாக அறிவித்தார். இதனை அவரது ரசிகர்கள் உற்சாகத்தோடு வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழருவி மணியன் சகிதம் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ளலாம் என முடிவு செய்திருந்ததாகவும் கொரோனாவால் அது முடியவில்லை எனவும் விளக்கினார்.
“எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகத் தேவை. அதனால் மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரம் செய்வது ஆபத்தானது என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். சிங்கப்பூரில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த போது தமிழக மக்களின் பிரார்த்தனையால்தான் உயிர்பிழைத்து வந்தேன். அவர்களுக்காக எனது உயிரே போனாலும் சந்தோஷம்தான். என்றார் ரஜினிகாந்த்.
கொடுத்த வாக்கை எப்போதும் தவறமாட்டேன். அரசியல் மாற்றம் என்பது கட்டாயம் தேவைப்படுகிறது. அரசியலுக்கு வந்து வெற்றிபெற்றால் அது மக்களின் வெற்றி. தோல்வியடைந்தால் அது மக்களின் தோல்வி. அரசியல் மாற்றம் நடக்கும். மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம் எனவும் அறிவித்தார் ரஜினிகாந்த்.