சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை இரவு 7 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் வரும் ஏப்ரல் 6ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணி முதல் வாக்குப்பதிவுகள் முடிவடையும் வரையில் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 126இன் கீழ் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான விதிமுறைகள் செயல்பாட்டில் இருக்கும் என தேர்தல் ஆணையம் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவும் நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.
எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்ற வலைதளங்கள் வாயிலாக பொது மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லக்கூடாது. இதில் குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவமான தகவல்தொடர்பும் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, ஏதேனும் கேளிக்கை நிகழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தவோ அல்லது ஏற்பாடு செய்வதன் மூலமாகவோ அங்குள்ள பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.
இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்திலும் மீறப்பட்டாலும், 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 126(2)இன் படி இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிக்கப்படும். தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் மற்றும் அத்தொகுதியில் வாக்காளர்கள் அல்லாதோர் ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் தங்கி உள்ளனரா என்பது கண்காணிக்கப்படும். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் அவரது தொகுதியில், அவரது சொந்த பயன்பாட்டிற்காக ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்காக ஒரு வாகனம் மற்றும் கூடுதலாக அவரது பணியாளர்கள் அல்லது கட்சி பணியாளர்களின் பயன்பாட்டிற்காக ஒரு வாகனம் என்ற எண்ணிக்கையிலான வாகன அனுமதி மட்டுமே பெற உரிமை உண்டு.
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கோ மற்றும் வாக்குச்சாவடியில் இருந்து அழைத்துச் செல்வதற்கோ, வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கும், வழங்குவதற்கும் அல்லது பயன்படுத்துவதற்கும் எந்த ஒரு வேட்பாளரும் அனுமதிக்கக் கூடாது. இது 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 133ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயல் ஆகும்.
இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரச்சார அலுவலகம் வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம் தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது. நாளை சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் முடியவுள்ள நிலையில், அரசியல் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார்.