குன்றத்தூர் அருகே செயல்படாத நிலையில் உள்ள கம்பெனியின் கழிவறையில் இருந்து அழுகிய நிலையில் இளம் ஜோடிகள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், சிட்கோவில் ஏராளமான கம்பெனிகள் செயல்பட்டு வருகிறன. கடந்த 2019ஆம் ஆண்டு இங்கு செயல்பட்டு வந்த கம்பெனி, தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனைத் தொடர்ந்து அந்த கம்பெனி இரண்டு ஆண்டுகளாக செயல்படாத நிலையில், காவலாளி ஒருவர் மட்டும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
இந்நிலையில், நேற்று அந்த கம்பெனியின் மேனேஜர், கம்பெனியில் ஒரு பகுதியில் உள்ள பணியை ஆய்வு செய்வதற்காக ஆட்களுடன் வந்துள்ளார். அப்போது கம்பெனியின் மூன்றாவது மாடியில் சென்று பார்த்த போது அங்கிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்குள்ள கழிவறையில் ஒரு சடலமும் மற்றொரு கழிவறையில் மற்றொரு சடலமும் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போரூர் உதவி கமிஷனர் பழனி, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் தலைமையில் விரைந்து வந்த போலீசார் அழுகிய நிலையில் சிதிலமடைந்து கிடந்த இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்தது 22 வயது மதிக்கத்தக்க இளம் ஆண் மற்றும் பெண் என்பது தெரியவந்தது. ஆண் ஒரு கழிவறையிலும், பெண் மற்றொரு கழிவறையிலும் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர்.
உடல் முழுவதும் அழுகி இருப்பதால் இறந்து கிடந்தவர்கள் யார் என்பது போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை. இறந்து போனவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது வட மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்த கம்பெனியில் தீ விபத்தில் ஏற்பட்டதில் இருந்து இரவு நேரங்களில் சிலர் இந்த கம்பெனியில் உள்ள இரும்பு கம்பிகளை திருடி சென்றதும் தெரியவந்தது.
மூடிக்கிடக்கும் கம்பெனிக்குள் இருவரும் தனிமையில் இருக்கும்போது கம்பிகளை திருட வந்தவர்கள் அந்த வாலிபரை கொலை செய்துவிட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்களா? அல்லது காதல் தோல்வி காரணமாக இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.