தனது நீண்டகால வேண்டுதல் நிறைவேறியதால் 7 கிலோ மீட்டர் பாதயாத்திரையாக சென்று திருச்சி சமயபுரம் மாரியம்மனை துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்தார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மிகுந்த தெய்வப்பக்தி கொண்டவர். என்னதான் கலைஞர் வீட்டில் உள்ள அனைவரும் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டிருந்தாலும் துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வதற்கு யாரும் மறுப்பு தெரிவிப்பதில்லை.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்த போது, கோவில் கோவிலாக துர்கா ஸ்டாலின் வழிபட்டு வந்தார், திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என பல கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருவதாக பல செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டு வந்தன.
அதாவது கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடைபெறுவதற்கு முன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வந்திருந்தார். தற்போது வேண்டுதல் நிறைவேறியுள்ளதால் கடந்த வாரம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
இந்த நிலையில் திருச்சி வந்த துர்கா ஸ்டாலின், திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றி தங்கியிருந்தார். ஹோட்டலில் இருந்து மாலை 5 மணிக்கு மேல் பாத யாத்திரையாக 7 கிமீ தூரம் நடந்து கோவிலுக்கு வந்தார்.
சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின், பின்னர் இரவு டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்தார். இதையடுத்து இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதனை வழிபட்டார். இதையடுத்து உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.