இ-பாஸ் முறையை ரத்து செய்துவிட்டு கட்டுப்பாடுகளுடன் பொதுப்போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கொரானா தொற்று பரவல் காரணமாக கடந்த நிதியாண்டில் 24-ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அனுமதி பெற வேண்டும் என்றக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் வழங்கும் முறையில் ஊழல் மலிந்து விட்டது. இ-விண்ணப்பம் பதிவு செய்யவே பெரும் செலவாகிறது. பிறகு ‘இடைத்தரகர்கள்’ உதவி இல்லாமல் இ-நுழைவு சீட்டு கிடைப்பதில்லை என்பதே மக்களின் அனுபவமாகியுள்ளது.
கொரானா தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழிற்சாலைகள் இயங்கலாம் என அரசு அனுமதித்துள்ளது. இதில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கான போக்குவரத்து வசதி குறித்து அரசு இதுவரை சிந்திக்கவில்லை என்பது வேதனை. மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள இடையூறுகளை கருத்தில் கொண்டு இ-பாஸ் அனுமதி முறையை ரத்து செய்து, கட்டுப்பாட்டு நடைமுறைகளுடன் பொதுப் போக்குவரத்தை இயக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.