அழிக்க வேண்டியது அநீதியைத்தான் உயிர்களை அல்ல. நீட் தேர்வு என்பது சமூக அநீதி; முதலில் அதை அழிப்போம் என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு குறித்த பயத்தினால் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீட் தேர்வினால் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என்று பதிவிட்டுள்ளதோடு உயிரை அழிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர், ஓ! மாணவ மகன்களே! மகள்களே! நீட் என்பது தேர்வுமல்ல;தற்கொலை என்பது தீர்வுமல்ல. பிறக்கும் யாருக்கும் தங்களை அழிக்கும் உரிமை இல்லை. அழிக்க வேண்டியது அநீதியைத்தான்; உயிர்களை அல்ல. நீட் தேர்வு என்பது சமூக அநீதி; முதலில் அதை அழிப்போம். நீங்கள் வாழப் பிறந்தவர்கள் என்று கூறி #SayNoToNEET #BanNEET என்ற ஹேஸ்டேக் உடன் பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு குறித்த அச்சத்தினால் கடந்த வாரம் அரியலூரில் விக்னேஷ் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஒரு மாணவியின் உயிர் பறிபோயிருக்கிறது. நீட் பற்றிய அச்சத்தை விட்டு தைரியமாக தேர்வினை எதிர்கொள்ள வேண்டும் என்பதே கல்வியாளார்களின் அறிவுரை.