
சென்னை ஐகோர்ட்டில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அதன் துணைத் தலைவர் சக்திவேல் தாக்கல் செய்த மனுவில், ‘திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தீப திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது தொடர்பாக அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் தெரிவிக்கவேண்டும்’ என்று கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த வழக்கு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில், ‘வரும் 29-ந் தேதி தீப திருவிழா நாளான அன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல, அதற்கு முந்தைய நாளான 28-ஆம் தேதியும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிற நாட்களில், காலை8 மணி முதல் மாலை 6 மணி வரை, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் 800 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி அவர்கள் அனுமதிக்கப்படுவர். கொரோனா காரணமாக தேர் திருவிழா கோவில் வளாகத்துக்குள் நடத்தப்படும்’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில், தேர் திருவிழாவை கோவில் வளாகத்துக்குள் நடத்தாமல், கோவிலைச் சுற்றியுள்ள 4 மாடவீதிகளில் நடத்த வேண்டும். உற்சவர் மாடவீதிகளில் வலம் வருவதுதான் இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் என்று வாதிடப்பட்டது.
அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம்தான் முடிவெடுக்க முடியும் என்பதால், ஐகோர்ட்டு தலையிட முடியாது” என்று கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.




