மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட மிக பிரமாண்டமாக சேலத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய 146 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி முடிவுற்று கடவுளின் சிலைக்கு வண்ணம் தீட்டப்பட்டு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. அங்கு 140 அடி உயரத்தில் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மலேசியாவுக்கு சுற்றுலா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் இந்த கோவிலில் தரிசனம் செய்து வருவார்கள். உலகத் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முருகன் கோயில் இதுவாகும். இங்கு நடக்கும் விழாக்களில் உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் கலந்து கொள்ளுவர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் சேலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில், வாழப்பாடியை அடுத்து புத்திரகவுண்டன்பாளையத்தில், 146 அடி உயரத்தில் பிரமாண்ட முருகன் சிலையானது நிறுவப்பட்டு வருகிறது.
இந்த சிலையை, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த, ஸ்தபதி தியாகராஜன் தலைமையிலான குழுவினரே வடிவமைத்து வருகிறார்கள். ஸ்தபதி தியாகராஜன் திருவாரூரை சேர்ந்தவர். இவர் தலைமையில் மலேசியாவில் உள்ள முருகன் சிலையை விட பிரமாண்டமாக 146 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணிகள் சேலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சுமார் ஐந்து ஆண்டுகளாக தினமும் 25 சிலை வடிவமைப்பு கலைஞர்களைக் கொண்டு முருகன் சிலையை வடிவமைக்கும் பணியைச் செய்து வருகின்றனர். தற்போது முழு உருவமும் அமைக்கப்பட்டு முழுமையாக வண்ணம் தீட்டும் பணியும் நிறைவடைந்துள்ளது. சிலையின் அருகே தற்போது ஒரு லிப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த லிப்ட் மூலம் பக்தர்கள் மேலே சென்று தாங்களே முருகன் சிலையின் கையில் உள்ள வேல் மீது பால் ஊற்றி அபிஷேகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த முருகன் சிலையை அமைத்து வரும் தீவிர முருக பக்தரான ஸ்ரீதர் கூறுகையில்,”இந்த முருகன் சிலையைச் சாதனைக்காக நான் கட்டவில்லை. முருகப் பக்தர்களைத் திருப்திப்படுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டேன். தமிழ் கடவுளான முருகனை அனைத்து மத தரப்பினரும் அதிகளவில் நேசிக்கின்றனர். கட்சிப் பாகுபாடின்றி இந்த பணியை ஆன்மீகம் என்ற அடிப்படையில் செய்து வருகிறோம், இந்த சிலை கட்டுமானத்தை 2016ல் எனது தந்தை முத்து நடராஜன் தொடங்கினார். தற்போது இந்த சிலை அமைக்கும் பணி 99 சதவிகிதம் முடிவடைந்துள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் பணிகள் முடிவடைந்து கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
தற்போதே ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்லும் நிலையில் இந்த சிலை விரைவில் திறக்கப்படவுள்ளதால், முருக பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.