சென்னையில் மின்சார புறநகர் ரயில்களின் சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு
தமிழத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டாலும், சென்னையில் பயணிகள் புறநகர் ரயில் சேவை மட்டும் இதுவரை தொடங்கப்படவில்லை. பேருந்து சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், இதையும் தொடங்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:-
மின்சார ரயில் சேவை
தமிழகத்தில் மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் மாநிலத்திற்குள்ளான ரயில் சேவையை தெற்கு ரயில்வே ஏற்கனவே மீண்டும் தொடங்கிவிட்டது. அதேபோன்று, பொருளாதாரத்தை மீட்டெடுக்க சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. பொதுமக்களுக்காக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புறநகர் ரயில் சேவை மற்றும் மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என, கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது.
அனுமதிக்க வேண்டும்
மின்சார ரயில்கள்/புறநகர் ரயில்களை மீண்டும் இயக்குவது, பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுக்கவும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார ரயில்கள் / புறநகர் ரயில்களை கோவிட் – 19 வழிகாட்டு நெறிமுறைகளுடன் மீண்டும் இயக்குவதற்கு தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.




