மத்திய அரசின் வேளாண் மசோதா விவகாரத்தில் ராஜஸ்தான் அரசு போல தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேளாண் மசோதா
மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ளது. விவசாயிகளின் நலனைக் காக்க ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. மத்திய அரசின் சட்ட வரம்புக்குள் தலையிடாமல், மாநில வரம்புக்குட்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. அவசரச் சட்டங்களாகவே இருக்கும் மத்திய சட்டப் பிரிவுகள் சிலவற்றை ரத்து செய்தும் ராஜஸ்தான் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, சட்டம் அல்லது துணைச் சட்டம் மூலம் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அரசு திட்டம்
மாநில அரசுகளின் வரம்பு மற்றும் கட்டணத்துக்குட்படாமல் மத்திய சட்டம் உருவாக்கும் புதிய சந்தைகளை, இதன் மூலம் ராஜஸ்தான் அரசு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
எனினும், சந்தை விவசாயம் மற்றும் துணை விவசாயம் ஆகியவை மாநில விவசாய உற்பத்தி சந்தைச் சட்டத்தின் கீழ் ராஜஸ்தானில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தனியார் சந்தைகளும் துணை சந்தைகளும் மாநில சட்டங்களின் கீழ் தானாக வந்துவிடும்.
இந்த நிர்வாக அதிகாரத்தைத்தான் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில அரசு பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய உணவுக்கழகம், மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் மற்றும் ராஜஸ்தான் சேமிப்புக் கிடங்கு கழகம் ஆகியவை குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையிலேயே கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு வேண்டுகோள்
இதன் மூலம், மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகள் மாநில அரசுக்குச் சந்தைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இத்தகைய ஆக்கபூர்வ நடவடிக்கையின் மூலம் விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ள ராஜஸ்தான் மாநில அரசைப் பாராட்டுகின்றேன்.
அ.தி.மு.க. அரசும் ஏற்று, ராஜஸ்தானைப் போல், மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.