வங்கக் கடலில் உருவாகி, கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்த கனமழை காரணமாகச் சென்னை மாநகர் வெள்ளநீரில் மிதக்கிறது. பேருந்துகள் செல்லக் கூடிய வழிகளில் எல்லாம் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பொதுமக்கள் அல்லல்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறது.
500க்கும் மேற்பட்ட ராட்சத பம்புகள், ஜேசிபிகள், ட்ராக்டர்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகிறது சென்னை மாநகராட்சி. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 2 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சென்னையைக் கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரடியாக களத்திற்கு சென்று பார்வையிட்டு வந்தார். முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகளையும் ருசித்து பார்த்தார்.
சென்னை சேதமே பிரதானமாக பேசப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழைப் பொழிவு கடுமையாக இருந்ததால், லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இதனால் விவசாயிகள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் முதல்வர் டெல்டாவுக்கு வந்து பார்வையிட வேண்டுமென்று அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களும் டெல்டாவிற்கு செல்வாரா ஸ்டாலின் என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின். இன்று (நவம்பர் 12) காலையில் பள்ளிக்கரனை நாராயனபுரம் பகுதியில் ஏரி உடைந்ததைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், மாம்பலம், வண்டலூர் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார். கேளம்பாக்கம் பகுதியில் 34 இருளர் குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டார்.
பின்னர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதியில் சுற்றிப் பார்த்துவிட்டு, மாலை 5.00 மணிக்குச் சென்னையிலிருந்து புறப்பட்டு திண்டிவனம் வழியாகப் புதுச்சேரி செல்கிறார். அங்கு திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு ஹோட்டலில் இரவு உணவு முடித்துவிட்டு அங்கேயே தங்குகிறார்.
தொடர்ந்து நாளை காலை கடலூர் வழியாக குறிஞ்சிப்பாடி தொகுதியில் இரண்டு பாயிண்ட்களில் ஆய்வு செய்துவிட்டு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் செய்கிறார். தொடர்ந்து நாகை மாவட்டம் செல்லும் அவர், மாலை திருச்சி சென்று அங்கிருந்து சென்னைக்குச் செல்ல இருப்பதாக முதல்வர் பயணத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.