தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்பவர்களுக்கான அரசு பேருந்துகளின் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது.
தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்வோருக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் தீபாவளி பண்டிகை, நாடு முழுதும் நவம்பர், 4ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. வெள்ளியன்று, ஒரு நாள் கூடுதலாக விடுப்பு எடுத்தால், ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சென்னையில் இருந்து வெளியூர் மற்றும் சொந்த ஊருக்கு செல்வோர், தங்கள் பயணத்திற்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்வது வழக்கம்.
அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில், ஒரு மாதத்திற்கு முன், முன்பதிவு செய்யலாம். அதன்படி, நவம்பர் 3ல் அரசு பேருந்துகளில் பயணிப்பதற்கான முன்பதிவு, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு இன்று துவங்குகிறது.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட பல்வேறு நகரங்களுக்கு சொகுசு பேருந்துகளும், படுக்கை வசதி உடைய பேருந்துகள், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.