திகார் சிறைக்குள் கைதிகள் மோதல்! 4 வாரத்தில் அறிக்கை கேட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
டெல்லி, இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், டெல்லியில் உள்ள திகார் சிறையில் சமீப நாட்களாக கைதிகளின் மோதல் அதிகரித்து வருவதை ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் கவனத்தில் எடுத்து கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த 22ம் தேதி திகார் சிறைக்குள் 25வயதுடைய கைதி சக கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும் கைதிகளுக்கு இடையே சண்டை ஏற்படுவது இந்த மாதத்தில் மட்டும் இது ஆறாவது முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்க டெல்லி தலைமை செயலாளர் மற்றும் சிறைத்துறையின் தலைவர் (Inspector General of Police) இருவருக்கும் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது. அதில், திகார் சிறையில் கைதிகளுக்கு இடையே நிகழும் வன்முறை மற்றும் பிரச்சனைகளை தீர்க்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது ? என விரிவான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பணியில் உள்ள பாதுகாப்பு காவலர்களின் அலட்சியத்தால் அரசு காவலில் உள்ள கைதிகளின் மனித உரிமை பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள தேசிய மனித உரிமை ஆணையம் இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 30 கைதிகள் வரை காயமடைந்து உள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.