கடவுள் மீது பழி போடுவது ஏன் என நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு அவர் கொடுத்த பதிலடி
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யானது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 23.9% சரிவை எதிர்கொண்டிருக்கிறது. ஆனாலும் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் இந்த சரிவு ஏற்பட்டது; இனிவரும் காலங்களில் சரியாகிவிடும் எனக் கூறி வருகிறது மத்திய அரசு. ஆனால் பொருளாதார சரிவு தொடர்பாக ரிசர்வ் வங்கி, எதிர்க்கட்சி தலைவர்கள் பலமுறை எச்சரித்தும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவுதான் இந்த நிலை என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ப.சிதம்பரம் இது தொடர்பாக திங்கட்கிழமையன்று கூறுகையில், மத்திய அரசு தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளமாட்டார்கள் எனக் கொந்தளித்திருந்தார்.
இதேபோல் என்டிடிவி சேனலுக்கு ஜிடிபி சரிவு தொடர்பாக ப. சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: வரலாறு காணாத வகையில் இந்தியாவின் ஜிடிபி 24% சரிவை எதிர்கொண்டிருப்பது மனிதர்களால் நிகழ்ந்த பேரழிவு.பொருளாதார சீர்குலைவுக்கு கடவுள் மீது பழியை போடுகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (கொரோனா என்பதே கடவுளின் செயல் என கூறியிருந்தார் நிர்மலா சீதாராமன்) . இந்த தேசத்தின் விவசாயிகளுக்கு கடவுளின் ஆசீர்வாதம் உண்டு என்பது வேளாண்துறையில் மட்டும் காணப்பட்டிருக்கும் வளர்ச்சி வெளிப்படுத்தி இருக்கிறது.
நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுவிடும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் சுப்பிரமணியன் கூறுகிறார். அவர் பிரதமர் மோடியுடன் எப்போது ஆலோசனை நடத்தினார்? சுப்பிரமணியனின் ஒவ்வொரு கருத்தையும் ரிசர்வ் வங்கியின் அறிக்கைகளே மறுக்கின்றன.
ரூ20 லட்சம் கோடி மதிப்பிலான ஆத்மநிர்பார் நிதி உதவி என்பது வெறும் நகைச்சுவையே தவிர வேறு எதுவுமே இல்லை. ஏழைகளின் கைகளில் பணம் இருந்தால்தான் நுகர்வு சக்தி அதிகமாகும். அதற்கான நடவடிக்கைகளே இப்போதைய தேவை. இவ்வாறு ப. சிதம்பரம் கூறினார்.