6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு..?; முதல்வர் முக்கிய ஆலோசனை..!

தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்தது. தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 36 ஆயிரத்தை கடந்தது. எனவே, தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் பொதுமக்களின் நலன் மற்றும் பொருளாதார்த்தினை கருத்தில் கொண்டும் படிப்படியான தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வரும் 15ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முற்பகல் 11.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.

கடந்த 1ம் தேதி, 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவ – மாணவிகளுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் மற்றும் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாகவும், மேலும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version