டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நவம்பர் 22ம் தேதி முதல் நேரடி விசாரணை தொடங்கப்படும் என சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.
டெல்லி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றங்களும் தங்களுடைய வழக்குகளின் விசாரணையை சில மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருந்தனர்; பின்னர் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட தொடங்கியது. உச்சநீதிமன்றத்தில் தொடங்கி மாநில உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களும் படிப்படியாக வழக்கு விசாரணையை வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரிக்க தொடங்கினர்.
டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களிலும் வழக்கின் விசாரணை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் சில மாதங்களாக குறிப்பிட்ட மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் நேரடி விசாரணை மற்றும் வீடியோ கான்பரன்சிங் விசாரணை என இரண்டு முறையிலும் விசாரணை செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் நவம்பர் 22ம் தேதி முதல் அனைத்து வழக்குகளும் நேரடி விசாரணையாகவே பட்டியலிடப்படும் என நீதிமன்ற பதிவாளர் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
எனினும், வழக்கினை சார்ந்தவர்கள் முன்கூட்டியே கேட்டு கொண்டால் வீடியோ காண்பிரன்ஸ் முறையிலும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.