தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என திட்டவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரோட்டில் ரூ.53.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து ரூ.97.85 கோடி மதிப்பிலான 15-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு பவானியாற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். கோபிச்செட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.
அப்போது, எடப்பாடி பகுதியை மாவட்டமாக்கும் திட்டம் உள்ளதா..? என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என திட்டவட்டமாக கூறினார்.
தமிழகத்தில், கடந்த 2009-ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு தான் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி , திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 உயர்ந்தது.