செப்டம்பர் 9ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் நீலகிரி மாவட்டம் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதியில் இருந்தே முற்றிலும் முடங்கியுள்ளது. சுற்றுலா தளங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டதால் அந்த மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்த பிரதான தொழிலான சுற்றுலா முற்றிலும் முடக்கப்பட்டது.
தமிழகத்தில் சுமார் ஐந்து மாதத்திற்குப் பிறகு பேருந்துகள் முழு அளவில் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், இன்னும் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலைவாசல் தளங்கள் திறக்கப்படவில்லை.
செய்தியாளர்களை சந்தித்த அம்மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா நீலகிரி மாவட்டத்தில் வரும் 9-ம் தேதி முதல் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காக்கள் திறக்கபடும் என்றார். தமிழக அரசின் அறிவிப்பிற்குப் பிறகு மற்ற சுற்றுலா தளங்கள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தனி இ பாஸ் வழங்கபடும் என்று அறிவித்துள்ளார். வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இ பாஸ் பெறுவது கட்டாயம் என்றும், உள் மாவட்ட சுற்றுலாப் பயணிகள் ஆதார் உள்ளிட்ட ஏதேனும் அடையாள அட்டையைக் காண்பித்து அனுமதி பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்..