மாநகராட்சி கட்டிடத்தில் திருட்டு அலுவலகத்தை பூட்டாததால் உள்ளே சென்று திருடினேன் என கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பெரம்பூர் கிருஷ்ணமூர்த்தி சாலை 35வது வார்டு மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவி பொறியாளராக பிரகாஷ் மற்றும் சிலர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். மறுநாள் காலை காவலாளி வந்து பார்த்தபோது அலுவலகத்தில் இருந்த 10 சேர் மற்றும் 2 கம்ப்யூட்டர்கள் திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மாநகராட்சி கட்டிடத்தின் எதிர் வீட்டில் உள்ள ஆறுமுகம் என்ற நபர் அலுவலகத்தின் உள்ளே சென்று பொருட்களை திருடிச்சென்றது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் கூறியதாவது, “நான் பலமுறை அலுவலகத்தை பூட்டி விட்டு செல்லுங்கள் என்று கூறினேன். ஆனால் இந்த மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகத்தை பூட்டாமலேயே சென்றனர். இதனால் அவர்களுக்கு பாடம் கற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பொருட்களை திருடினேன்” என கூறினார். இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்து பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.