நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டசபை மற்றும் மக்களவை தொகுதி இடைத்தேர்தல்,பீகார் தேர்தலோடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ காத்தவராயன்,திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி,சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் ஆகியோர் மறைவை தொடர்ந்து சமீபத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமாரும் காலமானார்.எனவே இவர்களின் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இந்த நான்கு தொகுதிகளில் எப்பொழுது இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கான தகவல் கிடைத்துள்ளது.
பீகார் சட்டசபையின் காலக்கெடு வரும் நவம்பர் 29 ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் அந்த மாநிலத்தில் நவம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் பீகார் தேர்தலோடு நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ,பீகார் மாநில சட்டசபைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று சட்டசபை மற்றும் ஒரு பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த தேர்தலுக்கு இந்த இடைத்தேர்தல் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.