முப்படை குழு தலைவராக எம்.எம்.நரவானே நியமனம்; ஓய்வு பெற இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் மத்திய அரசு அறிவிப்பு.
டெல்லி,
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் கடந்த 8ம் தேதி குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதற்கு பிறகு முப்படைகளின் அடுத்த தலைமை தளபதி யார்? என்பது தொடர்பான கேள்விகள் எழுந்த நிலையில் முப்படைகளின் குழு தலைவராக ராணுவ தளபதி எம்.எம் நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை என மூன்று படைகளிலும் மூத்தவர் நரவானே என்பதால் அவருக்கு குழு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதியை தேர்வு செய்யும் பணிகள் விரைவில் மத்திய அரசு தொடங்க உள்ள நிலையில் மூத்த அதிகாரி நிலையில் எம்.எம் நரவானே முன்னிலை வகிக்கிறார்; மேலும் இன்னும் ஐந்து மாதங்களில் ராணுவ தளபதி பொறுப்பிலிருந்து ஓய்வுபெற உள்ள எம்எம் நரவானே முப்படைகள் தலைமை தளபதியாக நியமிப்பது சரியான நடவடிக்கையாக இருக்கும் என ஓய்வுபெற்ற ராணுவ தளபதிகள் கூறியிருந்த நிலையில் முப்படைகளின் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த சில நாட்களுக்குள் முப்படைகளின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு அதில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்ற பட்டியலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு வழங்கப்படும் எனவும் அவை மத்திய அமைச்சரவை பரிந்துரையோடு செயல்படுத்தப்படும் என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அமைக்கப்படும் குழு அடுத்த முப்படைகளின் தலைமைத் தளபதி யார் என்பதை முடிவு செய்து பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் ஒப்படைப்பார்கள். இருப்பினும், நரவானேவின் செயல்திறன் மற்றும் கிழக்கு லடாக் மோதலை அவர் கையாண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில், அவர் முப்படை தலைமை தளபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது புரிந்து கொள்ள முடுகிறது. ஜெனரல் நரவனே மூன்று சேவைத் தலைவர்களில் மூத்தவர் மற்றும் ஏப்ரல் மாதம் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.