அழகிப் போட்டியில் பட்டம் வென்றவராக தேர்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு, கிரீடம் சூட்டப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் கீரிடம் பறிக்கப்பட்டது. இலங்கையில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கை தலைநகர் கொழும்புவில், திருமணமான பெண்களுக்கு நடந்த, மிஸ்ஸஸ் ஸ்ரீலங்கா அழகி போட்டியில் கலந்து கொண்ட பெண்களில், வெற்றியாளர் கடந்த 4ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். பல சுற்றுகளின் முடிவில், புஷ்பிகா டி சில்வா என்ற பெண், பட்டத்துக்கு உரியவர் என அறிவிக்கப்பட்டார். அப்போது தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு ‘மிஸ்ஸஸ் ஸ்ரீலங்கா’ பட்டம் வென்ற முன்னாள் அழகியான கரோலின் ஜூரி, மேடையில் மைக்கை எடுத்து பேச துவங்கினார்.
புஷ்பிகா திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பதால், அவருக்கு இந்த பட்டத்தை வெல்ல தகுதியில்லை எனக்கூறி பட்டம் சூடிய அடுத்த சில நிமிடங்களில் வேகமாக கிரீடத்தை புஷ்பிகாவிடமிருந்து பறித்தார். மேடையில் இருந்த 2வது இடம் பிடித்த பெண்ணுக்கு அந்த கிரீடத்தை அவர் அணிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பிகா, அழுதபடி மேடையை விட்டு வெளியேறினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதும், ஆனால் விவாகரத்து பெறவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் அவருக்கு ‘மிஸ்ஸஸ் ஸ்ரீலங்கா’ பட்டம் அளிக்கப்பட்டது. மேலும் அழகிப் போட்டியை நடத்திய அமைப்பு, புஷ்பிகாவிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறது. ‘திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண்களுக்காக நான் குரல் எழுப்ப உள்ளேன்’ என புஷ்பிகா கூறியிருக்கிறார்.