திண்டுக்கல் : கொடைக்கானல் கீழ்மலை பாரதி அண்ணாநகர் பகுதியில் ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை ,கிராமங்களான பாரதிஅண்ணாநகர், கள்ளக்கிணறு , புல்லாவெளி , பேத்துப்பாறை, அஞ்சிவீடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது.
இந்த பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு வாழை ,காப்பி, அவரை, கேரட், பலா உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது. அண்மை காலமாக யானை கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இன்று பாரதி அண்ணாநகர் பகுதியில் புகுந்த காட்டுயானை விளைநிலங்களில் சேதப்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும்,எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே வனப்பகுதிகளில் இருந்து விவசாய நிலங்களுக்குள் புகும் யானை கூட்டங்களை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.