நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார் மு.க ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவையில் நீட் நுழைவு தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை இன்று தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்ட பேரவையில் நீட் நுழைவு தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை இன்று தாக்கல் செய்தார்.

சட்ட மசோதாவை தாக்கல் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளோம். மருத்துவ படிப்பிற்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடும் தொடரும் வகையில் மசோதா இருக்கும். நீட்டில் நிரந்தர விலக்கு பெறும் சட்டமசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர், திமுக கொண்டுவந்துள்ள மசோதாவிற்கு ஆதரவு அளிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version