இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் கடந்த சில மாதங்ளாகவே பதற்றம் நிலவிவருகிறது மேலும்
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஜூன் மாதம் மோதல் ஏற்பட்டது.
இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லை முழுவதும் படைகளை குவித்து வருகின்றன.போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக பாதுகாப்பு மந்திரிகள் மட்டம் உள்பட பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையிலும் இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், லடாக் எல்லையில் உள்ள சுமர்-டெம்சோக் செக்டார் பகுதியில் 19ம்தேதி இந்திய பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அங்கு சுற்றித்திரிந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் பிடித்தனர். பிடிபட்ட சீன வீரரிடம் நடத்திய விசாரணையில் அவர் கவனக்குறைவாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட சீன ராணுவ வீரரின் பெயர் வாங் யா லாங் எனவும் தெரியவந்தது.
மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டிருந்த அந்த வீரருக்கு தேவையான மருத்துவம், உணவு, உடைகள் வழங்கப்பட்டது. அத்துடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சீன ராணுவத்திடமே மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சீன வீரர் வாங் யா நேற்று இரவு சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். சுசுல் மோல்டோ என்ற இடத்தில் நடந்த சந்திப்பின்போது அந்த வீரர் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.