தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இடி, மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
மழைக் காலத்தில் செய்யகூடாதவை என்னென்ன?
1.வீடுகளில் உள்ள உலோகத்தினால் ஆன தண்ணீர் குழாய்கள், ஆண்ட்டனாக்களுக்கு அருகில் செல்ல கூடாது.
2.மின்சாரத்தால் இயங்கக்கூடிய மின் சாதனங்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்
3.வெட்ட வெளியில் உலோக பொருட்களை மின்னல் ஏற்படும் போது பயன்படுத்த கூடாது
4.மின்னலின் போது கைப்பேசி/ தொலைபேசியினை உபயோகிப்பது நல்லதல்ல. செல்ஃபி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
5.ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்
இரும்பு கம்பியினால் ஆன வேலி அமைப்புகள், இரும்பிலான கைப்பிடி போன்ற அமைப்புகளில் மின்னல் தாக்குதலில் அபாயம் அதிகம்
6.இடி, மின்னலின் போது குடையை பயன்படுத்த கூடாது.
கட்டாயம் செய்ய வேண்டியவை என்னென்ன?
1.கார், பேருந்து உள்ளிட்ட முழுமையாக மூடப்பட்ட வாகனங்களுக்குள் இருக்கும்போது இடி, மின்னல் தாக்காது.
2.ஒதுங்குவதற்கான இடங்கள் இல்லாதபோது உயரமான இடங்களுக்கு அருகில் செல்வதை தவிர்த்து, கைகளால் கால்களை இறுக்க அணைத்து கால்கள் ஒன்றோ ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் குனிந்த நிலையில் தரையில் அமர்ந்து கொள்வது பாதுகாப்பானது. உடலுடன் மின்கடத்தும் பொருள்களின் தொடர்பு இருத்தல் கூடாது.
3.நீரினுள் இருந்தால் நீர்நிலைகளை விட்டு வெளியே வருவது சிறந்தது.
4.இடி, மின்னலின்போது கால்நடைகளை மரத்தடியில் கட்டி வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
5.சிறிய அளவு மின்சாரம் உணரும் போதோ, உடல் கூச்சம் ஏற்படும் போதோ மின்னல் தாக்குவதற்கான அறிகுறிகளாகும். எனவே, அந்நேரத்தில் உடனடியாக தரையில் அமர்ந்திட வேண்டும்.
மேலும், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கூறிய அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. மேலும், அவசர உதவி எண்களையும் வெளியிட்டுள்ளது. மாநில அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1070, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1077. தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.