ஆயூத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில், பொதுமக்களின் வசதிக்காக, அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுவது வழக்கம்.
தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊரில் கொண்டாட மக்கள் விரும்புவர். தனது குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து வெவ்வேறு மாவட்டங்களில் பணிபுரிவோர் பண்டிகை தினங்களுக்கு குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு தங்களது குடும்பத்தினர் மற்றும் ஊரில் இருக்கும் தனது நண்பர்களோடு நேரத்தை செலவிட விரும்புவர். இதனால் மக்களின் வசதிக்காக பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த வாரம் ஆயுதப் பூஜை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னையில், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் என 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சென்னையில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நவ.,1ம் தேதி முதல் சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து 16,540 சிறப்பு பேருந்துகளும், பண்டிகை முடிந்த பிறகு சொந்த ஊரில் இருந்து திரும்பும் மக்களின் வசதிக்காக, 17,719 சிறப்பு பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.