மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள்.
டெல்லி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் சென்னை ,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் மழையை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்;
அதில் சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை கவலையை ஏற்படுத்தி உள்ளதாகவும் பெரும் மழையினாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், காங்கிரஸ் தொண்டர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.