தமிழகத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க டிஜிபி அளித்த சட்ட முன் வரைவை கொண்டு புதிய சட்டம் இயற்றுவது குறித்து பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் இரு ரவுடி கும்பலுக்கு இடையில் நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வேலு என்பவர், தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த முறை விசாரணையின் போது, ரவுடிகள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகவும் ரவுடிகளால்
போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்தனர்.
வல்லநாட்டில் ரவுடியை பிடிக்கச் சென்றபோது வெடி குண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனின் மரணம் குறித்து தமிழக அரசு, தே. மு.தி.க தலைவர் விஜயகாந்த்தை தவிர, எதிர்க்கட்சிகள் என சொல்லப்படும் யாரும் இது குறித்து வாய்திறக்கவில்லை எனவும் வருத்தம் தெரிவித்திருந்தனர்.
மேலும் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்த நீதிபதிகள், இது தொடர்பாக இரண்டு வாரங்களில் தமிழக டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்கும் வகையில் சட்ட முன் வரைவு தயாரிக்கப்பட்டு உள்துறை அமைச்சகத்திடம் கொடுத்துள்ளதாக டிஜிபி தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்ட முன் வடிவை சட்டமன்றத்தில் வைத்து புதிய சட்டம் எப்போதும் இயற்றப்படும் என்பது குறித்து பதிலளிக்க உள்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்