விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்- அரசியல் தலைவர்கள் வாழ்த்து

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ள வாழ்த்து குறிப்பில், விநாயகர் பிறந்த நாளான இந்நன்னாள், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமும் மகிழ்ச்சியையும் சகிப்புத்தன்மையையும் எடுத்து செல்லும்நாளாகும். கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ளும் ஆற்றலை நம் அனைவருக்கும் விநாயகர் அருள்வார். தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி, வளமை, அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்தை கொண்டுவருவதாக விநாயகர் சதுர்த்தி அமையட்டும்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவிக்கையில், விநாயகர் சதுர்த்தி, பொதுமக்களுக்கு பாதுகாப்பை தருவதாகவும், அதேசமயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவும், வருங்கால முன்னேற்றத்துக்கு வித்திடுவதாகவும் அமையட்டும். கொரோனா எனும் சவாலானசூழ்நிலையை தடுப்பூசிகொண்டு எதிர்க்கும் மன உறுதி கொண்டு இந்த விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வாழ்த்துகையில், ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயகப் பெருமானின் திருவருளால் உலகெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும், நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும். வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்: இந்த நன்னாளில் விநாயகரின் அருளால் அனைவருக்கும் துன்பங்கள் அகன்று வளமும் நலமும் பெருகட்டும். அமைதியும் அன்பும் உலகில் தழைத்தோங்கட்டும்.

சமக தலைவர் சரத்குமார்: உலகெங்கும் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடும் சகோதர, சகோதரிகளுக்கு விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version