பசுமை பட்டாசு உள்ளிட்ட அனைத்து வகையான பட்டாசுகளும் வெடிக்க தடை; பண்டிகைகளை கொண்டாட எண்ணெய் மற்றும் மெழுகால் செய்யப்பட்ட தீப ஒளிகளை பயன்படுத்துங்கள் என நீதிபதிகள் அறிவுரை.
டெல்லி, தீபாவளி, புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும் பண்டிகை கொண்டாடுவதற்கு பட்டாசுகளை வெடிப்பார்கள். வெடிக்கப்படும் பட்டாசு காரணமாக ஏற்படும் மாசுபாட்டால் சுற்றுசூழல் மற்றும் மக்கள் பெரிய அளவில் பாதிக்கிறார்கள் என்பதை எல்லாம் மேற்கோள்காட்டி பட்டாசுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பது தொடர்பான வழக்கு இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சப்யசாசி பட்டாச்சார்யா மற்றும் அனிருத்தாராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது,பசுமை பட்டாசு உள்ளிட்ட எந்த வகையான பட்டாசுகளும் வெடிப்பதற்கு முழுமையான தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். மேலும், சத் பூஜை, குருநானக் ஜெயந்தி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தீபாவளி என எந்த பண்டிகைக்கும் பசுமை பட்டாசு அல்லது எவ்வித பட்டாசுகளும் வெடிக்கவும், விற்கவும் கூடாது எனவும் இதனை மேற்கு வங்க போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தங்களுடைய உத்தரவில் குறிப்பிட்டனர்.பட்டாசுகளுக்கு பதிலாக மெழுகு மற்றும் எண்ணெய் பொருள்களால் ஆன தீப ஒளிகளை தங்களுடைய கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக பிரதிபலித்துக் கொள்ளலாம் என அறிவுரை கூறிய நீதிபதிகள் பசுமை பட்டாசு மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்டறிவதில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இத்தகைய தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இவ் வழக்கின் விசாரணையின்போது பசுமை பட்டாசுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் முந்தைய வழக்குகளின் தீர்ப்பில் கூறியுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட போது முந்தைய வழக்கின் தீர்ப்புகளை கண்மூடித்தனமாக நம்பி மக்களுடைய உயிர் சார்ந்த பிரச்சனைகளில் உத்தரவுகளை வழங்க முடியாது என நீதிபதிகள் சற்று கோபத்துடன் தெரிவித்தனர்.
இந்நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், பட்டாசு வெடிப்பது தொடர்பாம தொடர்ந்த வழக்கு இன்று பிற்பகலில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.