லக்கிம்பூரில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் முழு அடைப்பு! வேறிச்சோடிய சாலைகள்! 9 அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல்.
டெல்லி, கடந்த 3ம் தேதி மாலை உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் பேரணியின் போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஜீஸ் மிஸ்ராவின் மகன் கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். மேலும், அதனால் ஏற்பட்ட வன்முறையில் மொத்தமாக 8 பேர் உயிரிழந்தனர்.
இவை மனித உரிமை மீறல் என கூறி நாட்டில் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் கண்டன குரல் வலுக்க தொடங்கியது. இந்நிலையில் லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று “முழு அடைப்பு” பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் அரசியல் கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் முழு அடைப்புக்கு சம்மதம் தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை தொடங்கிய முழு அடைப்பு போராட்டம் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது; அதற்கு பிற்பாடு அத்தியாவசிய கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக காலையில் இருந்து இப்போது வரை மொத்த 9 அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆட்டோ , டாக்சி போன்றவை குறைந்த அளவு இயக்கப்பட்டாலும் சில இடங்களில் அதன் இயக்கத்திற்கு சிவ சேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஆட்டோ டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனால், பெரும்பாலும் வாடகை வாகனங்களை இயங்குவதை தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கின்றன.
மேலும், மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வன்முறை நடைபெறலாம் என சந்தேகிக்கபடும் நிலையில் அங்கு தயார் நிலையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை 4 மணி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து போலீசாரும் தொடர் ரோந்து பணியில் இருக்க வேண்டும் என காவல்துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.