அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடத்த பரிசீலனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடத்த பரிசீலனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிராமப்புற மாணவர்களால் ஆங்கிலம் சரியாக பேச முடியவில்லை. 8, 9, 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் அவர்கள் பயிலும் வகுப்பிற்குரிய ஆங்கிலத்தை சரியாகப் பேச இயலவில்லை.
இதைக் கருத்தில் கொண்டு, மாலை பள்ளி முடிந்த பிறகு 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு அரை மணி நேர வகுப்பும், 9,10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும் அரை மணி நேர ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகள் (spoken english class) நடத்த முடிவு செய்திருப்பதாக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, தமிழ் வழியில் 12 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்கள் உயர்கல்வியில் ஆங்கிலம் பேச முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, இது நல்ல முயற்சி என பாராட்டினார்.
மற்ற எம்.எல்.ஏ.,க்களும் இத்திட்டத்தை வரவேற்றனர். ஆங்கிலத்தில் பேச தடுமாறும், பயப்படும் மாணவர்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக இருக்குமென பெற்றோர்கள், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.